Skip to main content

வாடாத நினைவுகள் - லேனா தமிழ்வாணன்

லேனாவின் பார்வையில் என்ற இந்தப் பகுதியில் சமூக அக்கறைகளை மட்டுமே இதுவரை எழுதி வந்திருக்கிறேன்.


ஆனால் முதல் முறையாக இப்பகுதியில் எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்த எண்ணுகிறேன்.


தமிழ் எழுத்துலகில் நவீன வடிவங்களைப் பயன்படுத்தியவர்களுள் சுஜாதாவின் பங்கு மிக உருப்படியானது.



60 வயது ஆனதும் சாய்வு நாற்காலியைக் கேட்காமல், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு வரை எழுத்து எழுத்து என்று 73 வயதிலும் எழுத்தை அப்படி நேசித்தார்.


வாசகர்கள் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டே அவரது படைப்புகள் அமைந்தன. தம் திருப்திக்கு எதையாவது எழுதுவேன்; படித்துத் தொலைப்பது உங்கள் தலையெழுத்து என்கிறபோக்கு சுஜாதாவிடம் இருந்ததே இல்லை.


1970களில் இளைஞர்களாக இருந்தவர்களை ஈர்க்க ஆரம்பித்தார். அவர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார். காலத்திற்கு ஒவ்வாத எழுத்து என்றோ, இவர் அந்தக் காலத்து ஆசாமி என்றோ இவரது எழுத்துக்கள் பெயர் வாங்கியதே இல்லை. நவீனங்களுக்கு ஏற்ப, அண்மைத் தலைமுறைக்கு ஏற்பத் தன் எழுத்தை நவீனப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் சுஜாதாவுக்கு இருந்தது.


அறிவியல் சார்ந்த எழுத்து என்று எடுத்துக் கொண்டால், சுஜாதாவின் பங்களிப்பை எவருமே குறைத்து மதிப்பிடமுடியாது. எட்டாத உயரத்தில் இருந்த விஷயங்களைப் பிடித்துப் பாமரன் கையில் கொடுத்து இந்தா புரிந்து கொள்; இது மிகச் சுலபம் என்று ஆக்கியவர் சுஜாதா.


இவரது எழுத்து நடைமுறைக்குப் புதிது. அதில் இருந்த நமட்டுச் சிரிப்பை அடையாளம் காணவே உயர்ந்த ரசனை வேண்டும்.


ஆக, வாசகர்களின் இரசனைகளைக் கருத்தில் கொண்டு சில இடங்களில் இறங்கி வந்தும், சில இடங்களில் அவர்களிடம் நீங்கள் மேலே வாருங்கள் என்று இழுத்துக் கொண்டும் வந்த இரட்டைச் சாதனையாளர் சுஜாதா.


ப்ரியா படத்தில் ஆரம்பித்த இவரது திரையுலகச் சாதனை சாதாரணமானதல்ல. திரையுலகில் பலராலும் அண்ணாந்து பார்க்கப்படுகிற ஷங்கரே அண்ணாந்து பார்க்கிற மனிதராக எழுத்துலகைச் சேர்ந்த ஒருவர் விளங்கியிருக்கிறார் என்பது எழுத்துலகிற்கே பெருமை.


கணிப்பொறியும் எழுத்தும் சுஜாதாவின் இரு கண்கள். தொழில் நுட்பம் நன்கு தெரிந்தவர்களுக்கு எழுத்துலகம் என்பது தொலைதூரம். எழுத்தாளர்கள் பலருக்கோ கணிப்பொறி என்பது கனவுலகம். ஒரு மனிதன் இரு குதிரைகளில் சவாரி செய்யமுடியுமா என்று கேட்டவர்களுக்கு சுஜாதாவின் அறிவிக்கப்படாத பதில் முடியும் என்பது.


இந்த எழுத்துலக மேதை குமுதத்தோடு இணைந்திருந்த காலத்தில் நன்கு நெருங்கிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் நலனில் அவர் காட்டிய அக்கறைகள்; இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை எண்ணிப் பார்க்கும்போது என் கண்கள் பனிக்கின்றன.


தமிழ் எழுத்துலகிற்கென்று பல பெருமைகள் உண்டு. இவற்றுள் முக்கியமானது. எந்த மொழிக்காரர்களிடமும் தமிழ் வாசகர்கள் ஒன்றைச் சொல்லி மார்தட்டிக் கொள்ளலாம். "எங்களுக்கென்று ஒரு சுஜாதா இருக்கார் தெரியும்ல?"


 ( நன்றி: http://www.tamilvanan.com/ )

Comments

  1. /. திரையுலகில் பலராலும் அண்ணாந்து பார்க்கப்படுகிற ஷங்கரே அண்ணாந்து பார்க்கிற மனிதராக / லேனா தமிழ்வாணனுக்குக் கடுமையான கண்டனங்கள்.

    ReplyDelete
  2. மன்னிக்கவும். அந்த கருத்தில் தவறு இருபதாக எனக்கு தெரியவில்லை.

    ReplyDelete
  3. sorry Kannan; Sujatha sir is far greater than Mr.shankar. His contribution to Tamil literature, electronic voting machine and cinema is higher than many persons.

    ReplyDelete
  4. >> திரையுலகில் பலராலும் அண்ணாந்து பார்க்கப்படுகிற ஷங்கரே அண்ணாந்து பார்க்கிற மனிதராக

    Note the word "திரையுலகில்". That means not everybody.

    ReplyDelete

Post a Comment