Skip to main content

ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா

[%image(20070621-Sujatha_Desikan.jpg|200|150|Me and Sujatha)%]

ஏப்ரல் மாதம் சுஜாதாவை சந்தித்த போது


"தேசிகன் ஒரு முறை ஸ்ரீரங்கம் போகணும்? என்னை அழைத்துக்கொண்டு போக முடியுமா ?" என்றார். 


இரண்டு வாரம் முன் இந்த பயணம் நிறைவேறியது.
அதை பற்றி சுஜாதா ஆனந்த விகடன் கற்றதும் பெற்றதுமில் எழுதியிருக்கிறார். ( அதை எனக்கு அனுப்பிவைத்த நண்பர் ராஜேஷுக்கு நன்றி )



பிறந்த தினத்-தன்றே போக நினைத்து, டிக்கெட் கிடைக்காமல், சென்ற வாரம்தான் ஸ்ரீரங்கம் சென்றேன்.


லல்லு வந்ததில், ரயில் நிலை-யச் சுத்தத்தை கான்ட்ராக்ட் விட்டு எழும்பூர், திருச்சி ஜங்ஷன்கள் எல்லாம் பளபளவென்று இருக்-கின்றன. பெட்டிகளும் சுத்தமாக இருந்த ராக்ஃபோர்ட் எக்ஸ்பிர-ஸில் வந்து சேர்ந்தேன். பாயும் நீர் அரங்கத்தின் இரு நதிகளிலும் ஒரு சொட்டுத் தண்ணீர்-கூட இல்லை.


வெயில் வருவதற்குள் கோயிலுக்குப் புறப்பட்டேன். கோபுரங்களை ஓவராக வெள்ளையடித்ததில் அல்பைனோ தோற்றமளிக்க, வாட்டர் ஸ்ப்ரே வைத்துக் காலலம்பிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தேன். பூச்சாற்றி உற்சவம் முடிந்துபோன ஒரு சாதாரண வெள்ளிக்கிழமையிலேயே இத்தனை கூட்டத்தைப் பார்த்தபோது, என் இளமைக் கால ஸ்ரீரங்கம் கோயிலை எப்போதோ இழந்துவிட்டேன் என்பது மறு ஊர்ஜித-மாயிற்று.


டிரஸ்டி திருமதி கிரிஜா மோகன் உதவியுடன், அதிக சிரமமில்லாமல் அரங்கனை வணங்க முடிந்தது. அர்ச்சகர்கள் வரவேற்றனர். நல்ல-வேளை... ‘‘சிவாஜி கதை என்ன?" என்று கேட்கவில்லை. ‘‘வாங்கோ! உங்களுக்காக இன்னிக்கு வைரமுடி சேவை. அதிர்ஷ்டம் பாருங்கோ!" இலவச அதிர்ஷ்டத்தைப் பெற்றுக்-கொண்டு, வெளியே வந்தேன். ஒரு கண்ணாடிப் பாத்திரம் போலதேசிகன் என்னைப் பத்திரமாக அழைத்துச் செல்ல, பெருமாள் தாயார் மட்டும் சேவித்துவிட்டு, ஆசுவாசத்துக்கு தாயார் சந்நிதிக்கு முன் மண்டபத்தில் உட்கார்ந்து-கொண்டேன்.


சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்-பட்ட கோயில் பெரியவாச்சான்-பிள்ளை உபன்யாசங்கள் செய்ய முதுகு சாய்த்த மண்டபத்தின் முன் மேட்டு அழகியசிங்கர் சந்நிதியில் உள்ள பழங்காலச் சுவர் சித்திரங்களை தேசிகன் படம் எடுத்து டிஜிட்டலில் உடனே காட்டினார்.


மண்டபத்தில், சின்ன வயசில் இங்கே தேவதாசிகள் தீபம் கொண்டு-வருவதைப் பார்த்திருக்கிறேன். அழகழ காக ஆபரணங்களுடன் நிற்பார்கள். 1954 வரை இந்தப் பழக்கம் இருந் திருக்கிறது. இப்போது சொன்னாலே உதைப்பார்கள்.


வடக்கு உத்தர வீதியில் எங்கள் ஆசார்யன் சிறுபலியூர் அண்ணன் சுவாமிகளுக்குத் தண்டம் சமர்ப் பித்துவிட்டு, தாத்தாச்சாரியார் தோட்டத்து ‘இமாம் பசந்த்’தைப் பாதிக் கதுப்பு ருசித்துவிட்டு, தம்பி ராஜகோபாலனின் புத்தகங்களில் ‘கோயில் ஒழுகு’ - பகுதி 111, கேரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் ‘A History of God’ இரண்டை மட்டும் கவர்ந்துகொண்டு, அடுத்து அரங்கன் எப்போது அழைக்கப்போகிறான் என்பது தெரியாமல், மறுதினம் பல்லவன் எக்ஸ்பிரஸில் திரும்பினேன்.
சுஜாதாவுடன் பல்லவனில் திரும்பி வரும் போது, அவருடன் 5 மணி நேரம் பேசிக்கொண்டு வந்தது ஒரு இனிய அனுபவம். சினிமா, இலக்கியம், அரசியல், பழைய நினைவுகள் என்று பல்வேறு விஷயங்களை குறித்து பேச முடிந்தது.


1. தசாவதாரத்தின் கதை என்ன ? கமல் ஏற்று நடிக்கும் வேடங்கள் யாவை ?


2. சிவாஜி படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி என்ன ?  ரஜினி அந்த படத்தை பார்த்துவிட்டு உங்களிடம் என்ன சொன்னார் ? நீங்க ரஜினியிடம் என்ன சொன்னீர்கள் ?


3. அடுத்த சங்கர் படம் என்ன ? அதன் கதை என்ன ? யார் நடிக்க போகிறார்கள் ?


4. சிறுவயதில் நீங்கள் வளரும் போது, உங்கள் அப்பா உங்களுடன் இல்லாததை பற்றி எப்பவாவது நினைத்து வருந்தியதுண்டா ?


5. காந்தளூர் வசந்தகுமாரன் கதை இரண்டாம் பாகம் எப்போது எழுத போகிறீர்கள் ?
( ரொம்ப வற்புறுத்தி இரண்டாம் பாகம் எழுத சொல்லியிருக்கிறேன். அதற்காக முதல் பாகத்தை ஒரு முறை படித்து அவருக்கு குறிப்பு அனுப்ப உள்ளேன். அப்படியே சோழர்கால புத்தகங்கள் சிலவற்றையும் தேட வேண்டும் )


6. நாலாயிர திவ்ய ப்ரபந்ததற்கு சிலப்பதிகாரம், புறநானுறு போல் எளிய உரை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன்


7. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் ?


பயணம் முடிந்த பின்,
"தேசிகன் இந்த டிரிப்புக்கு எவ்வளவு தர வேண்டும்?" என்றார்
"சிவாஜி படத்தின் பிரிவியூ டிக்கேட் ஒன்று!"  என்றேன்
( சிவாஜி படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்னாடி நான் அவருடன் இந்த படத்தை பார்த்தேன் )


ஸ்ரீரங்கம் மாறிவிட்டது என்று கற்றதும் பெற்றதுமில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. போன வாரம் எனக்கு திரு.மணவாளனின் அறிமுகம் கிடைத்தது( என் தம்பி மூலமாக). அவர் எனக்கு சில பழைய ஸ்ரீரங்கம், திருச்சி படங்களை அனுப்பிவைத்தார். பார்த்துவிட்டு பெருமூச்சு விடுவதற்கு அதிலிருந்து இரண்டு படங்கள் இங்கே தந்திருக்கிறேன்.


[%popup(20070621-srirangam1.jpg|712|429|ஸ்ரீரங்கம்)%]
[%popup(20070621-RockFortView1.jpg|712|430|மலைக்கோட்டை)%]


( இந்த் படங்கள் எடுத்த வருடம் 1850 -1860 ! )

Comments