Skip to main content

பதம் பிரித்த பிரபந்தம்

போன வாரம் எழுத்தாளர் சுஜாதாவை பார்த்த போது, செல்போனுக்கும் டைரிக்கும் நடுவில் ஒரு புத்தகத்தை இருப்பதை கவனித்தேன். என்ன என்று வாங்கிப் பார்த்த போது அது - "நாலாயிர திவ்யப் பிரபந்தம்". வெளியிட்டவர்கள் தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை. ( இரண்டு பாகங்கள் விலை 225/= ).


இந்த புத்தகத்தின் சிறப்பு - எளிதில் படிக்க உதவும் வகையில் பாசுரங்கள் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது.


சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட புத்தகத்தை திரும்பவும் வெளியிட்டுள்ளார்கள். ( உபயம்: கடுகு அல்லது அகஸ்தியன் என்றழக்கப்படும் ரங்கநாதன்). பதிப்பாசிரியர்கள்: எழுத்தாளர்கள் 'சுபா'.


பிரபந்தம் மீது பிரேமை கொண்டவர்கள் வைத்திருக்க வேண்டிய பதிப்பு.


சிறப்பு பிகு: தென்கலை, வடகலை இரண்டு திருமண், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் தனியன்கள் அடங்கிய முதல் பிரபந்த புத்தகம் இது :-)


இந்த வாரம் கல்கியில் சுஜாதா எழுதிய பகுதி கிழே தந்துள்ளேன்.


கிடைக்குமிடம் :


37, Canal Bank Road, Kasturaba Nagar, Adyar, Chennai 600 020
Phone: 044-2441 4441, 94446 59779


 


 



 ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள வேண்டும். அது சில சமயம் எளிதாக இருக்கும். சில சமயம் ரொம்ப கடினமாக. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் எளிமை ரகத்தைச் சேர்ந்தவை. நம்மாழ்வாரின் பாசுரங்களும் அப்படியே அவரது திருவிருத்தம் மட்டும் படுத்தும். உதாரணத்துக்கு இந்த 31வது பாசுரத்தைப் பாருங்கள்.


இசைமின்கடூதென்றிசைத்தாலிசையிலமென்றலைமே
லசைமின்களென்றாலசையுங்கொலாமம்பொன்மாமணிக
டிசைமின்மிளிருந்திருவேங்கடத்துவன்றாட்சிமய
மிசைமின்மிளிரியபோவான்வழிக்கொண்டமேகங்களே.


தலைகால் புரியவில்லையல்லவா? இதில் ஒளிந்து கொண்டிருக்கும் பாடல் என்ன பார்க்கலாம். முதலில் பதம் பிரித்தால் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும்.


இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலைமேல்
அசைமின்கள் என்றால் அசையும்கொலோ அம்பொன் மாமணிகள்
திசைமின்மிளிரும் திருவேங்கடத்து வன்தாள் சிமயம்
மிசை மின் மிளிரிய போவான்வழிகொண்ட மேகங்களே


(வன்தாள் சிமயம் - வலிமையான அடிவாரமுள்ள சிகரம்)


இப்படிப் பிரித்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாகிறது. இந்தப் பாடலில், தலைவி திருவேங்கட மலைக்குச் செல்லும் மேகங்களை தூது போகச் சொல்கிறாள். அவை 'போ போ அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை' என்று மறுத்துவிட, 'என் தலையையாவது மிதித்துவிட்டுச் செல்லுங்கள்' என்கிறாள்.


இப்படி ஒரு அழகான ரத்தினத்தை பதம் பிரித்துத் தோண்டியெடுக்க வேண்டும்.


தமிழை ஒரு agglutinative language என்பார்கள். வார்த்தைகளை ஒட்ட வைத்துக்கொண்டே போகலாம். 'இசைமின்கடூது' என்பதை 'இசைமின்கள்தூது' என்றும், 'மணிகடிசைமின்மிளிரு'-மணிகள் திசை மின் மிளிரும் என்றும் வெளியே கொண்டு வந்தால் கிடைப்பது ஓர் அற்புதமான அகத்துறைப் பாடல். எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத்தக்கன என்று தலைவி நினைத்து வேங்கட மலைச்சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் மேகங்களிடம் என்னைப்பற்றி பெருமாளிடம் சொல்லுங்கள் என்று கேட்டதில் தூது சொல்ல அவை இசைய(சம்மதிக்க)வில்லை. அதனால் 'என் தலைமேல் உங்கள் பாதத்தை வைத்துவிட்டாவது செல்லுங்கள்' என்று கேட்கிறாள்.


இந்த நாட்களில் திருப்பதிக்கு செல்லும் மேகங்களை லட்டு வாங்கிவர மட்டுமே சொல்வோம்!

Comments